Friday 10 February 2012

தருணத்திற்காகவும் தற்காப்பிற்காகவும்தான் தலித் அடையாளமா? - 1

(மே 17 இயக்கத்தை முன்வைத்து...)



- ஸ்டாலின் ராஜாங்கம்

அருந்ததி ராய்
கடந்த சனவரி  7-ந் தேதி சென்னையில் காலச்சுவடு நூல்வெளியீட்டு விழா நடந்தது.  அதில் கலந்துக் கொண்டிருந்த அருந்ததிராய் முன் காலச்சுவடுஎதிர்ப்புப் புரட்சியினை நிகழ்த்திக் காட்டவிரும்பிய மே 17 என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.  Anti ஈழம், Anti தமிழ், Anti பெரியார், Anti முசுலீம், Anti காஷ்மீர் என்று பலவாக கோஷங்கள் எழுப்பப்பட்டாலும் எதிர்ப்புக்குரிய காரணமெனக் குறிப்பாக எதையும் சொல்லவில்லை.  அந்தவகையில் இக்கோஷங்கள் யாவும் பிராமண எதிர்ப்புப் பட்டியலில் அடக்கப்பட்டு எல்லாவற்றுக்கும் அவர்கள் பார்ப்பனர்களாய் இருப்பதே காரணம் என்று சொல்லி முடிக்கப்படுகிறது.  அரசியல் காரணம் என்ற வகையிலும், காலச்சுவடுக்கு எதிரான குற்றச்சாட்டு என்ற வகையிலும் இவை  புதிதல்ல.  இந்தசாகசத்தை’ப் படம்பிடித்து அடுத்த சிலநிமிடங்களில் இணையத்தில் உலவவிட்டு தங்களுக்குரிய ஈழ ஆதரவுப் பட்டாவைக் கெட்டியாகக் காப்பாற்றிக் கொண்டார்கள் அந்த அமைப்பினர்.

அங்கு எழுப்பப்பட்ட கோஷங்களில் காலச்சுவடு தலித்துகளைப் பயன்படுத்துகிறது என்பதும் ஒன்று.  இதுவரை தலித்துகளுக்கு ஆதரவாகக் காலச்சுவடு எதையும் செய்ததில்லை;  தலித்துகளுக்கு எதிரான அது அவர்களை ஏமாற்றிப் பயன்படுத்துகிறதுஎன்பது இதன் பொருள்.  தலித்துகளுக்காகக் கவலைப்படுவதைப் போல அமையும் இக்கூற்றில் தலித்துகள் சுயமற்றவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.  அவர்களின் அறிவோ, தன்னிலையோ இங்கு அங்கீகரிக்கப்படுவதில்லை.  இது தமிழக பிராமண எதிர்ப்பு அரசியலின் தலித்துகள் பற்றிய வழக்கமான சாதிய மனப்பதிவு.  தங்களை மட்டுமே தெளிவானவர்களாகவும், பிராமணர்களோடு சேர்ந்தாலும் சோரம் போகாதவர்களாகவும் காட்டிக்கொள்வது இவர்களின் வாடிக்கை.  காலச்சுவடு, ஆனந்தவிகடன், இந்து மட்டுமல்ல.  அதிமுக, பாஜக போன்ற எவற்றில் இவர்கள் இருந்தாலும் தங்களை இவ்வாறே சொல்லிக் கொள்ள விரும்புகிறார்கள்.  அதன் மூலம் தங்களைச் சுயமுள்ளவர்களாகவும், தன்னிலையானவர்களாகவும் காட்டிக் கொள்கிறார்கள்.

தலித்துகள் தொடர்பான இக்குற்றச்சாட்டைக் காலச்சுவடு மீது கூறும் இவர்கள் யார்? இதுவரையிலும் நடந்துவந்த தலித் பிரச்சினைகளுக்கும், அது தொடர்பான போராட்டங்களுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?  இவர்கள் இதுநாள்வரை எங்கிருந்தார்கள்?  தலித்துகளைப் பற்றி இவர்களுக்கோ, இதுபோன்ற புதிய அமைப்புகளுக்கோ ஏதும் தெரியுமா?  தலித்துகள் சார்ந்து நடந்துவந்த மாற்றங்களுக்கும், விளைவுகளுக்கும் பின்னால் இவர்களின் ஆய்வு, கூட்டம், வெளியீடு, விவாதம் என்று எவையேனும் இருந்ததுண்டா?  2009 முள்ளிவாய்க்காலுக்கு முன் தமிழகத்தில் தலித் பிரச்சினைகள் இருந்ததில்லையா?  அன்றாடம் சாகவில்லையா?  ஒரு வகையில் மே 17 இயக்கம் ஆரம்பித்த பின்னாலாவது தலித்துகளுக்காக ‘அக்கறைகொண்டதுண்டா? 

காலச்சுவடை எதிர்ப்பதற்கான காரணத்தைத் தவிர தலித் பிரச்சினையைப் பற்றி எப்போதாவது பேசியதுண்டா?  அந்த வகையில் தலித்துகளைப் பயன்படுத்தியது மே 17 என்ற இந்த அமைப்புதான்.  எனவே காலச்சுவடை நோக்கிக்கூறும் குற்றத்தைச் செய்தது இவர்களே.  தாங்கள் சார்ந்த குறிப்பான பிரச்சினை ஒன்றிற்காக மற்றொரு தரப்பை எதிர்க்கும்போது, தானே கண்டுகொள்ளாதிருந்த அம்சத்தை எதிர்ப்பின் வலிமைக்காகக் கையாளுவது ஒருவகை தந்திரம். இவ்வாறு சேர்த்துப் பேசுவது, தலித் பிரச்சினைகளுக்காகப் போராடாமல் / இணையாமல் பிராமணர் எதிர்ப்பு போன்றபொதுஎதிரிக்காக எண்ணிக்கைப் பெரும்பான்மை கருதி தலித்துகளையும் இணைத்துப் பேசிய கடந்தகாலத் திராவிட இயக்கத்தின் பாணி.  இது பிராமணர் அல்லாதார் அரசியலின் தொடர்போக்காக நீடிக்கிறது.

காலச்சுவடு மீது தலித் பற்றி கூறும் குற்றச்சாட்டு எதுவென தேடிப் பார்த்தால் அக் கூட்டத்தில் விநியோகிக்கப்பட்ட பிரசுரத்தில்சுந்தரராமசாமி பிள்ளை கெடுத்தாள் விளை என்ற கதையெழுதி தலித்துகளை இழிவுப்படுத்தினார்.  அதைத் தலித்துகள் எதிர்த்தனர்.  அதற்கு அவர் பதில் சொல்லவில்லைஎன்ற காரணத்தைக் கண்டடைந்திருந்தனர்.  இது ஒரு பழைய குற்றச்சாட்டு.  அக்குற்றச்சாட்டை இப்போதைய எதிர்ப்பு ஒன்றின் போது ஒரு அம்சமாக சேர்த்துக் கொள்கிறார்கள்.  அக்கதை பற்றி அப்போது எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் இவர்களில் யார்?  அக்கதையைப் படித்ததுண்டா?  அதைப்பற்றி இதற்குமுன்பு எப்போதாவது பேசியதுண்டா?  கதை எதிர்ப்பு மீதான எதிர்வினைகளை அறிந்ததுண்டா?  கதை எதிர்ப்பில் ஈடுபட்டவர்களின் தற்போதைய கருத்து என்ன?  தலித்துகள் தரப்பிலிருந்து எதையாவது சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றுக் கருதி இவர்கள் கண்டடைந்த காரணமாகவே இது இருக்க முடியும்.  தலித்துகள் மீது அன்றாடம் ஏவப்படும் வன்முறைகளைப் பற்றி பிராமணரல்லாத / தமிழ் ஏடுகளில் ஒரு சதவிகிதம் இடமும் அளிக்கப்படாமல் சாதிவெறி கடைபிடிக்கப்படுகிறது.  அதற்கு மாறாக தலித் பிரச்சினைகளுக்கு பிராமண / ஆங்கில ஏடுகளில் தரப்படும் ஓரளவு இடத்தையும் முடக்குவதுதான் இச்செயல்பாடுகளின் நோக்கம்.  இது தான் சாதிவெறி; தலித் எதிர்ப்பு.

பொதுவாக, 1980களின் தொடக்கத்தில் ஈழப்பிரச்சினை எழுந்தபோது தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களும், விவாதங்களும், வெளியீடுகளும் உருவாயின.  தேசிய இனப் போராட்டம் பற்றிய பார்வை கட்சிகள் மத்தியிலும் விவாதிக்கப்பட்டன.  அச்சூழலிலிருந்து உருவான சொல்லாடல்களில் ஓர் இடதுசாரித்தன்மை இருந்தது.  ஈழப்பிரச்சினையோடு சமூகத்தின் பிற பிரச்சினைகள் பற்றிய ஓர்மையும் இருந்தது.  2000-த்தின் இறுதியில் ஈழப்போர் உச்சத்தை அடைந்திருந்தபோதும் தமிழகத்தில் கொந்தளிப்பு இருந்தது.  அதையொட்டி நாம் தமிழர், மே 17 போன்ற பல்வேறு அமைப்புகள் தோன்றின.  இவை இயல்பானதே.  ஆனால் இந்த அமைப்புகளிடம் இடதுசாரித் தன்மை இல்லாதது மட்டுமல்ல விவாதத்திற்கும், கருத்துரிமைக்கும் எதிரான போக்குதான் மேலோங்கியுள்ளது.  சமூகத்தின் பிற பிரச்சினைகளை இனவாதத்தால் மூடிமறைக்கும் போக்கு மட்டுமல்ல, வட்டார பெரும்பான்மை சாதிகளின் பின்னணியும் அடர்ந்து இருக்கிறது.  இவர்களுக்குச் சாதி ஒழிப்பு, தலித்துகள் மீதான வன்முறை, தமிழ் வாழ்வின் சமகால நெருக்கடிகள் பற்றி எந்தவித அக்கறையும் இருப்பதில்லை.  சவாலில்லாத இடத்தில் அட்டைக்கத்தியை வீசுவதன் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்க முயற்சிப்பவர்கள்.

தலித்துகளின் ஓர்மையுள்ள அறிவுச் செயற்பாடுகளையோ அதற்கான தளங்களையோ மறுக்கும் வகையில் சமயத்திற்கேற்ப தலித் அடையாளத்தைப் பயன்படுத்தும் சாதியவாதிகளான இவர்களே கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
                                                                                                                                                           (தொடரும்)

7 comments:

  1. தோழர்,
    ஒரு இயக்கத்தின் ஒட்டு மொத்த போராட்ட வரலாற்றையும் வாசித்து விட்டு இது போன்ற கட்டுரைகள் எழுதுவது நலம். தலித்துகள் பலரை உள்ளடக்கியே 'மே 17 ' இயக்கம் செயல்பட்டு வருகிறது.
    தலித்துகளுக்கான போராட்டத்தில் அவர்கள் பங்கு என்ன என கேட்கும் முன் "பரமக்குடி படுகொலையை" கண்டித்து அவ்வியக்கம் நடத்திய போராட்டத்தை பற்றி தெரிந்து கொண்டு எழுதுங்கள்..

    நன்றி..

    ReplyDelete
    Replies
    1. தலித்துகளை உள்ளடக்காத அமைப்புகள் இந்தியாவில் ஏதேனும் உண்டா? தலித்துகளை கோஷம் போடவும், தற்கொலை செய்யவும் மட்டுமே பயன்படுத்தி வருகின்றன பல அமைப்புகள். தலித் இல்லாத அமைப்புகளில் எங்காவது தலித் தலைவராக வரமுடியுமா? வந்திருக்கிறாரா? பரமகுடி சம்பவத்தை நடத்தியவர்கள் நல்லவர்கள் போலத்தானே நடமாடுகிறார்கள்,தலித்துகள் மேல் நடத்தப்படும் எந்த வன்முறைகளுக்கும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எந்த வித நடவடிக்கையும் எடுத்ததாக சரித்திரம் உண்டா?

      Delete
    2. வரும் காலத்தில் தமிழ்தேசியத்தின் விடுதலையை ஒடுக்கப்பட்டச் சமூகத்தின் நேர்மையான அரசியல் தலைமையே வழி நடத்த முடியும். இதுவே தமிழர்களுக்கு சாத்தியமான அரசியல் வருங்காலம். மே பதினேழு இயக்கம்.

      http://www.pathivu.com/news/18414/57//d,article_full.aspx

      முதலில் நான் இந்த கட்டுரையை நேற்று படித்த பொழுது பதிலை அளிப்பதற்கு ஒன்றும் இல்லை கட்டுரையாளர் நாலு சுவரை தன்னைச் சுற்றி எழுப்பிக்கொண்டு அதனுள் இருந்து எழுதியுள்ளார் இதற்கு பதில் எழுதுவது தேவையில்லாதது என்று விட்டுவிட்டேன்.

      ஆனால் தங்களைப்போன்றவர்கள் காலச்சுவடின் சூழ்சிகளுக்குள் ஆட்படுவது என்பது சரியான தீர்வாக இருக்காது என்பதால் பதில் எழுதினேன். நான் கொடுத்திருக்கும் சுட்டியிலேயே தங்களுக்கான பதிலும் கட்டுரை பதிந்தவருக்கான பதிலும் உள்ளது..

      Delete
  2. முழுக்க முன்முடிவுகளோடு எழுத அமரும் போது இது மாதிரியான பிரதிகளை தான் உருவாக்க இயலும், உங்கள் இரு பதிவுகளும் முழுக்க எழுதும் முன்பே உங்களுக்கு இருக்கும் அபிப்ராயங்களை தினிக்கும் முயற்சியாகவே உள்ளது.

    கொஞ்சம் மனம் திறந்து விஷயங்களை அனுக வேண்டும், நீங்கள் காலச்சுவட்டில் இருக்கலாம், உங்களுக்கு வேறு போக்கிடம் இல்லாமல் இருக்கலாம், அதற்காக காலச்சுவடு எல்லா வகையிலும் புனிதம் பெற்றுவிடாது, ஸ்டாலின் நீங்கள் அங்கு இருப்பது இட ஒதுக்கீடு அடிப்படையிலாக இல்லாமல் உங்கள் சொந்த அறிவு பலத்தின் அடிப்படையிலாக இருக்க வேண்டும் என்பதே என அவா...

    எனக்கு காலச்சுவடு சார்ந்த முக்கிய நண்பர்களை தெரியும் அவர்களின் நேர் பேச்சில் உங்கள் இருப்பு பற்றியான பதிவு வேறு வகையாகவே உள்ளது. எங்கும் இருப்பின் உங்கள் சுயத்தை இழப்பது, நெடிய போக்கில் உங்களை பாதிக்கவே செய்யும்.

    ReplyDelete
  3. திருவாளர் ஸ்டாலின் அவர்களே அருந்ததி ராயின் படத்தை தேர்ந்தெடுத்ததின் நோக்கம் என்ன உங்கள் முதலாளி நாங்கள் அருந்ததிராயை எதிர்த்தோம் என்று திரித்து சொன்னதை வழிமொழியவா..

    இதை நேற்றே கேட்க நினைத்தேன் நாலு சுவரை தாண்டி எனது குரல் உங்களுக்கு கேட்குமோ கேட்காதோ என்ற ஐயப்பாட்டினால் கேட்கவில்லை..

    ReplyDelete
  4. Dear Stalin, recently I had a very good discussions with my friends about your recent writings, while I could understand that the strategies which you have adopted to write and critic the ideologies of Marxism is a third rate one. People like you are selfish in nature and in reality never going to do anything for the cause of dalits and what you need are just silly billboards of your name, I could not see any distinction between you and other castiest of Tamilnadu. Simply, in the name of annihilating castes from society you are hiding behind the ideas of a caste.

    ReplyDelete
  5. ஸ்டாலினின் இந்தக் கட்டுரையில் நான் தலையிடலாமா என நான் ஒதுங்கியிருக்கலாம் என நினைத்தேன்.ஆனால் பி.கெ.வி. கதையை எதிர்த்தவர்களின் தற்போதைய நிலை என்ன என்ற கேள்வி என்னை இந்த விவாதத்திற்குள் இழுக்கிறது. நேர்மைக்குக் கொஞ்சம்கூட அருகில் வர முடியாத கதை அது.ஒரு தலித் பெண் ஆசிரியையானபின் அவள் செய்ததாக சுராவால் கட்டமைக்கப்படும் அறமீறல் என்பது தலித்துகளால்தான் முடியும் என்பதும் அதற்குத் தான் மிகவும் வருந்துவதாகவும் சொன்னாலும் அந்தக் கதையை எதிர்த்து முதலில் எழுதியவன் என்பதால் கூறுகிறேன். அந்தக் கதை குறித்த எங்களின் எந்தக் கேள்விகளுக்கும் சுரா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பதில் சொல்லவில்லை.சரி அந்தக் கதை குறித்த மே 17 இயக்கத்தினரின் கருத்து இருக்கட்டும், உங்கள் கருத்து என்ன ஸ்டாலின்

    ReplyDelete